
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள லாஹவுல் ஸ்பிடி மாவட்டத்தில், ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் தவறிய டெம்போ டிராவலர் மற்றும் ஃபார்ச்சூனர் வாகனங்களுக்கு போலீசார் ரூ.66,000 அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு ஹர்லிங் பகுதியில் ஏற்பட்டது.
அதாவது காசா பகுதியில் இருந்து ரெகோங்பியோவுக்கு ஒரு தீவிர நோயாளியை கொண்டு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸுக்கு, முன்னால் சென்ற சுற்றுலாப் பயணிகள் குடிபோதையில் இருந்ததால் வழிவிடவில்லை. இதனால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடிய சூழல் உருவானது.
இசசம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, குற்றவாளிகளை சிசிடிவி ஆதாரங்களின் மூலம் அடையாளம் கண்டறிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 196Eன் கீழ், ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுக்கும் வாகனங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ஆனால் இந்த வழக்கில், முறையாக வழிவிடாமல் நோயாளியின் உயிரை ஆபத்தில் தள்ளியதற்காக 2 வாகனங்களுக்கும் கூட்டுமாக ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், சாலை விதிகளின் மீதான அலட்சியத்தை எவ்வளவு பெரிய விளைவுகளுக்கு காரணமாக்கும் என்பதைத் துல்லியமாக காட்டுகிறது.
மோட்டார் வாகனச் சட்ட திருத்தம் 2019-ன் கீழ், பிரிவு 196E புது சேர்க்கையாக உள்ளதால், இது காப்பீடு இல்லாத வாகன இயக்கம் மற்றும் சாலை பாதுகாப்பு மீறல்களை தண்டிக்க பயன்படுத்தப்படுகிறது. இப்பிரிவின் கீழ் உரிமத்தை இடைநிறுத்தவும், ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது.
இந்தியாவில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுதல் என்பது ஒரு சமூகப் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. அவசர தேவைக்காக பயணிக்கும் மருத்துவ வாகனங்களுக்கு வழிவிடாமல் இருக்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஹிமாச்சலப் பிரதேச காவல்துறையும், சாலைப் போக்குவரத்து அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய நடைமுறைகள், எதிர்காலத்தில் பல உயிர்களை காக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.