பரமக்குடி வைகைநகர் பகுதியில் சிகாமணி என்பவர் வசித்து வந்தார். இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை சிகாமணி மற்றும் அவரது நண்பனான மாதவன் நகரைச் சேர்ந்த ராஜா முகமதுவும் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மாலுக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இந்த மாணவியை பாலியல் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி  புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் புகார் அளித்துள்ளனர். அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இது குறித்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசார்  கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதான பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலர் சிகாமணியை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான விதமாக செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு  ஏற்படும் விதமாக நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திரு சிகாமணி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி  வைக்கப்படுகிறார். மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவரிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.