தமிழக பா.ஜ.க-வில் மாநில ஐடி விங் தலைவராக இருந்து வந்த நிர்மல்குமார், அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் அண்ணாமலையில் ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி அதிமுகவில் நிர்மல் குமாரை இணைத்தற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் ஆவேசமாக பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் பாஜகவின் கூட்டணி கட்சியாகவுள்ள அதிமுக இதை செய்திருக்கக்கூடாது. அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என கூறியிருக்கிறார். மேலும் பாஜக மட்டும்தான் தமிழகத்தின் எதிர்காலம் என அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுகவினர், தங்களது கட்சியின் முன்னாள் MLA-வை கூட்டணியில் இருக்கும் போதே எப்படி உங்கள் கட்சியில் சேர்த்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.