தமிழகத்தில் ஆட்சியை அகற்றுவதற்கு சதி திட்டம் நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.‌ இது குறித்து சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை அகற்ற நினைப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். பாஜகவின் சதி திட்டத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். மேலும் பொய் செய்திகளை மட்டுமே பரப்பி செயல்படுகின்ற கட்சி பாஜக என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 28-ம் தேதி சென்னையில் உள்ள பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி விழா தொடங்கியது. இந்த விழாவினை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இந்த புகைப்பட கண்காட்சியை நாள்தோறும் பலர் வந்து பார்வையிட்டுவதோடு அதன் அருகில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்கின்றார்கள். இந்த புகைப்பட கண்காட்சியை இன்று உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.