திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பாதிரி கிராமம் மாதா கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கந்தன் தனியார் சினிமா நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தென்னிந்திய சினிமா டிவி போட்டோ பிளட் ஒர்க் யூனியன் உறுப்பினராகவும் இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு நேரம் அரண்மனை-4 என்ற சினிமா படப்பிடிப்புக்காக சூட்டிங் வாகனத்தில் எலக்ட்ரிக் சம்பந்தமான பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தை தென்காசியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் சின்ன சேலம் சிறுதானிய உணவகம் அருகே வாகனத்தின் முன்பக்க டயர் பஞ்சரானதால் ராஜாவும் கந்தனும் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி புதிய டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் சொகுசு பேருந்து சூட்டிங் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயங்களுடன் ராஜா உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கந்தனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.