ஹைதராபாத்தில் உள்ள  தலாப் கட்டா பகுதியில் மே 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர் கம்பிரசர் திடீரென வெடித்ததால் 2 பேர் காயமடைந்தனர். அந்த விபத்தால் ஏற்பட்ட சத்தத்தால் அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு அஸ்ரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, அவர்கள் நிலை தற்போது நிலையாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெடிப்பு ஏன் ஏற்பட்டது, தொழில்நுட்பக் கோளாறு அல்லது பராமரிப்பு குறைபாடா என்பதை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்காக பெறப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாகுத் புரா தொகுதி AIMIM எம்.எல்.ஏ. ஜாஃபர் ஹுசைன் மெஹ்ராஜ் மற்றும் தலாப் சஞ்சலாமைச் சேர்ந்த மருத்துவர் சமீனா ஆகியோர் அஸ்ரா மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், அவர்களுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்கச் செய்வதற்காக மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்களை எம்எல்ஏவும், மருத்துவமனையும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.