
ராஜஸ்தானில் அல்வார் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென 8 தெரு நாய்கள் அவரை தாக்கியது. அப்போது அவர் தப்பிக்க முயன்ற நிலையில் நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின் அவர் கத்தி கூச்சலிட்ட போது அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் உதவ முன்வந்தார். அதன் பின் அப்பகுதியில் இருந்த குடியிருப்பாளர்களும் திரண்டு வந்து அந்த பெண்ணை மீட்டனர். இதில் அந்தப் பெண்ணுக்கு உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணை தெரு நாய்கள் கடித்தது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாபில் ஜலந்தர் நகரில் வசித்து வந்த 65 வயது மூதாட்டி தனது குருத்வாராவில் இருந்து திரும்பும்போது 7-8 தெரு நாய்கள் அவரை தாக்கியதால் அவர் கடுமையாக காயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான நிலையில் அந்த வீடியோவில் நாய்கள் முதலில் அவரை சுற்றி வளைத்து, பின்புறத்திலிருந்து கீழே விழச்செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. அதில் அந்த மூதாட்டி துப்பட்டாவை வைத்து தன்னை பாதுகாக்க முயன்றபோதிலும் நாய்கள் அதையும் இழுத்து தாக்குதலை தொடர்ந்து மேற்கொண்டன. இதுபோன்ற நடுங்க வைக்கும் சம்பவங்கள் தெரு நாய்கள் மீதான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய கேள்விகளை மீண்டும் எழுப்பி மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.