
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் விமானப்படை தளம் ஒன்று உள்ளது. அங்கு தேஜாஸ் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு 24 மணி நேரமும் இரண்டு அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானப்படைத்தளத்தின் சுற்றுச்சுவரை தாண்டி நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.
இதைப் பார்த்த வீரர்கள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து விமானப்படை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது பெயர் சந்தீப் என்றும் சண்டிகரைச் சேர்ந்தவர் என்றும் முன்னுக்குப் பின் முரணாக கூறினார்.
இதனால் அவரை அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் மீண்டும் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.