திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில் சிறுவன்கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ஒரு இரும்பு கால்பந்து கோல் கம்பம் அவரது தலையின் மேல் விழுந்தது. இதனால் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்  சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.