
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமீர்பூரில் உள்ள ஜலால்பூர் காவல் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது 13 வயது சிறுமி ஒருவர்அந்த கிராமத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் படிக்கிறார்.
அவர் தனது வீட்டுப் பின் பகுதியில் செல்லப்பிராணிகளுக்கு உணவளிக்கச் சென்றபோது, அதனை கவனித்த இரு இளைஞர்கள் அவரை கடத்தி அருகில் உள்ள இடத்தில் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்த போது அந்த சிறுமி அலறல் சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சத்தத்தைக் கேட்டு, அவளது குடும்பத்தினர் விரைந்து அந்த இடத்துக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களை மிரட்டிய குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் ஜலால்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இரு இளைஞர்கள் மீதும் பாலியல் குற்றச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கிராம மக்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கிராமமக்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், இனியும் அலட்சியம் காட்ட முடியாது என்ற வகையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.