
‘சிங்கார சென்னை 2.0’ என்ற திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் சென்னையை சர்வதேச தரத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டு திடல்கள், மயான பூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல புதிய திட்டங்களும் மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் புதிதாக 16 பள்ளிக்கட்டிடங்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயான பூமிகள், 11 பூங்காக்கள் மற்றும் புராதன சின்னமான விக்டோரியா பொதுக்கூடத்தை பாதுகாத்து, புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். இந்த 42 திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் ரூ.98.59 கோடி தொகையை நிதி ஒதுக்கீடு செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து விக்டோரியா பொது மண்டபத்தில் உள்ள தரைத்தளமானது நிரந்தரமான மற்றும் சுழல் கண்காட்சி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, 3 பக்க காட்சியகங்கள், பார்வைக்கூடம் மற்றும் ஒரு அரை வட்ட காட்சியகம் அமைக்கபட உள்ளது. மேலும் செயற்கை குளம் மற்றும் மழைத்தோட்டங்களுடன் கடற்பாசி பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்கலாம். பின் மழைநீரை நிலத்தில் செலுத்தி நிலத்தடி நீரையும் சேமித்திட, கடற்பாசி பூங்காக்கள் வாய்ப்பாக அமையும். தொடர்ந்து சிறந்த கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய பள்ளிக்கட்டிடங்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த தகவலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.