சத்தீஸ்கர் மாநிலத்தில், சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியதில், அதை ஓட்டி வந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் சீற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே, சேதமடைந்த வாகனங்கள் மற்றும் சம்பவ இடத்தில் திரண்ட பொதுமக்கள் கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கின. மேலும், விபத்து நடந்த காரின் உள்ளே இருந்த ஜோடி ஒன்று முத்தமிட்டுக் கொண்ட அதிர்ச்சி அளிக்கும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைனர் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது மற்றும் பெற்றோர் அவர்களுக்கு வாகனம் தருவது குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டப்படி, மைனர் சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்களுக்குச் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் வாகனப் பதிவு ரத்து உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வழியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கிய வாகனங்களைப் பறிமுதல் செய்து போக்குவரத்தைச் சீரமைத்தனர். மேலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பாரதிய நியாய சம்ஹிதையின் முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

“>

இந்த விபத்தின் துல்லியமான காரணத்தைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துவரும் காவல்துறையினர், சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.