மும்பை  அருகே இயங்கும் உள்ளூர் மின்சார ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர், சக பயணியான பெண்மணியை பெல்ட்டால் கொடூரமாகத் தாக்கி மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலின் பெட்டிக்குள் நடந்த இந்த வன்முறையின்போது, அருகில் இருந்த சக பயணிகள் யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்தது இணையத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலோ அல்லது கைது நடவடிக்கைகளோ வெளியிடப்படவில்லை.

இதேபோல், வெள்ளிக்கிழமை காலை தானே ரயில் நிலையத்தில் பெண்களுக்கான பெட்டியில் பாம்பு ஒன்று இருப்பதாகப் பயணிகள் அச்சத்துடன் தகவல் தெரிவித்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  ரயிலில் அவசர சங்கிலி இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டதை அடுத்து, ரயில்வே ஊழியர்கள் தீவிர சோதனை நடத்தினர். காலை 9:14 மணி முதல் 9:26 மணி வரை சுமார் 12 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டு சோதனைக்குப் பிறகு பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டாலும், ரயிலில் பாம்பு இருந்ததா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஒரே நாளில் மும்பை ரயில்களில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் பயணிகள் மத்தியில் கடும் பீதியையும் பாதுகாப்புக் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ரயில்களில் நடக்கும் இதுபோன்ற வன்முறைகளைத் தடுக்கக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.