ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம்  அருகே, தவறான தொலைபேசி அழைப்பு   மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலால், 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மனைவியும் அவரது காதலனும் ஊர்ப் பஞ்சாயத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ககுடி கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி  என்பவருக்கும் ஷோபா  என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஷோபாவின் செல்போனுக்கு வந்த தவறான அழைப்பு மூலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி நாயக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் தீவிரமடைந்த இந்த கள்ளக்காதலால் மயங்கிய ஷோபா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளைத் தவிக்கவிட்டு பாலாஜி நாயக்குடன் ஓட்டம் பிடித்தார்.
:

மனைவியைக் காணவில்லை என்று சிரஞ்சீவி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இருப்பினும், அண்மையில் கள்ளக்காதலால் கணவர்கள் படுகொலை செய்யப்படும் செய்திகளைக் கண்டு எச்சரிக்கையான சிரஞ்சீவி, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தேடிக்கொண்டே மனைவியையும் தீவிரமாகத் தேடி வந்தார். இறுதியில் ஷோபாவும் பாலாஜி நாயக்கும் பெங்கிலபள்ளியில் தங்கியிருந்து, குப்பத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டதை சிரஞ்சீவி கண்டுபிடித்தார். உடனடியாக உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இருவரையும் பிடித்து பஞ்சாயத்தார் முன் ஆஜர்படுத்தினார்.

கோயிலில் நடந்த கிராமப் பஞ்சாயத்து விசாரணையின் போது, சிரஞ்சீவியை வழியிலிருந்து அகற்றுவதற்காக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவலைக் காதலன் பாலாஜி நாயக் ஒப்புக்கொண்டார். சிரஞ்சீவியின் சுதாரிப்பால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அவர் உயிர் தப்பினார். முதலில் புகாரைக் தீவிரமாக விசாரிக்காத காவல்துறை மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளர்   இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.