ஆன்லைனில் சீஸி மோமோஸ் ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு, உணவகத்தின் தரப்பில் இருந்து கிடைத்த சர்ப்ரைஸ் அனுபவம் தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களின் மனதை வெகுவாகக் கவர்ந்து வைரலாகி வருகிறது.

அந்தப் பெண் தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொண்ட போது, உணவின் பார்சலைத் திறந்து பார்த்தவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தான் கேட்ட சில பொருட்கள் அதில் விடுபட்டிருந்த போதிலும், அதற்கு ஈடாக உணவகம் செய்த ஒரு எளிய காரியம், வாடிக்கையாளர் திருப்திக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஆர்டர் செய்த உணவில் ஒரு பொருள் விடுபட்டதை உணர்ந்த உணவக நிர்வாகம், அதை அப்படியே விட்டுவிடாமல் வாடிக்கையாளருக்கு மதிப்பளிக்கும் விதமாகச் செயல்பட்டுள்ளது. விடுபட்ட பொருளுக்கான தொகையான ₹20 பணத்தைத் திரும்ப வைத்ததோடு மட்டுமல்லாமல், கையால் எழுதப்பட்ட அன்பான மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் அந்த பார்சலுக்குள் வைத்து அனுப்பியுள்ளனர்.

அதில், “எங்கள் தவறுக்கு மிகவும் வருந்துகிறோம், இந்த சிறு தொகையை ஏற்றுக்கொண்டு எங்களை மன்னிக்கவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வியாபார நோக்கத்தையும் தாண்டி, ஒரு வாடிக்கையாளரின் நம்பிக்கையைக் காப்பாற்ற உணவகம் எடுத்த இந்த நேர்மையான முயற்சி அந்தப் பெண்ணை மிகவும் நெகிழ வைத்துள்ளது.

இந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தைக் குறிப்பிட்ட அந்தப் பெண், பார்சலில் இருந்த கடிதம் மற்றும் ₹20 பணத்தின் வீடியோவை இணையத்தில் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது.

மேலும் “வணிகம் என்பது வெறும் பணப் பரிமாற்றம் மட்டுமல்ல, மனிதநேயமும் வாடிக்கையாளர் மீதான மரியாதையும் தான்” என்று நெட்டிசன்கள் பலரும் உணவகத்தின் இந்தச் செயலைப் பாராட்டித் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். சிறிய தவறாக இருந்தாலும் அதை நேர்மையோடு ஒப்புக்கொண்டு சரிசெய்யும் இந்த குணம், இன்றைய காலகட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

“>