ஒடிசா மாநிலத்தில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் மீது பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ள நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எட்டு  மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணிற்கு நேர்ந்த சோகமும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அரங்கேறிய அராஜக வன்முறையும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற அநாகரிகச் சூழலை மீண்டும் ஒருமுறை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

பாதிப்புக்குள்ளான அந்தப் பெண் பாம்பு கடித்த உடனேயே மருத்துவமனைக்கு அழைத்து வரப்படாமல், மிகவும் தாமதமாகவே கொண்டு வரப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைக்கு வந்த பிறகு, அங்குள்ள மருத்துவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சுமார் ஐந்து மணி நேரம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

சிகிச்சையின் பலனாக அந்தப் பெண்ணின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இருப்பினும், வீட்டிற்குச் சென்ற சில மணி நேரங்களிலேயே அந்தப் பெண்ணின் உடல்நிலை எதிர்பாராத விதமாக மீண்டும் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. மூச்சுத் திணறல் மற்றும் விஷத்தின் தீவிரம் மீண்டும் உடலுக்குள் பரவியதன் காரணமாக, துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணும் அவளது வயிற்றில் வளர்ந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் இந்தத் திடீர் மரணம், அந்த கிராம மக்கள் மத்தியிலும் அவளது குடும்பத்தினர் மத்தியிலும் சொல்லமுடியாத  துயரத்தையும், அதே சமயம் கட்டுக்கடங்காத ஆத்திரத்தையும் உடனடியாகக் கிளப்பியது.

பெண்ணின் மரணத்தால் ஆவேசமடைந்த கிராம மக்களும் உறவினர்கள், திரளாகத் திரண்டு அந்த மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். தங்களுக்கு நேர்ந்த இழப்பிற்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என்று நேரடியாகக் குற்றம் சாட்டி, அங்கிருந்த மருத்துவரைச் சூழ்ந்துகொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்டம் என்ன, நியாயம் என்ன என்று எதையும் யோசிக்காத அந்த ஆத்திரக் கும்பல், திடீரென அந்த மருத்துவரை நடுரோட்டிலும் மருத்துவமனை வளாகத்திலும் போட்டு மிகக் கொடூரமான முறையில் தாக்கத் தொடங்கியது.

“எப்படி அவள் உயிரிழக்கலாம்?” என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்டுக்கொண்டு, தடுத்து நிறுத்த முயன்ற சக ஊழியர்களையும் மீறி அந்த மருத்துவரை வளைத்து வளைத்து அடித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பயங்கரமான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும் வரை காத்திருக்காமல், தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொண்டு ஒரு மருத்துவர் மீது இப்படிப் பொதுவெளியில் மிருகத்தனமாக வன்முறையைப் பிரயோகிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாம்பு கடியைப் பொறுத்தவரை உரிய நேரத்தில் கொடுக்கப்படும் சிகிச்சையே உயிரைக் காக்கும் என்ற மருத்துவ நிதர்சனத்தை உணராமல், தாமதமாக அழைத்து வந்துவிட்டு, மரணத்திற்குப் பின் மருத்துவர்கள் மீது பாய்வது சேவை செய்யும் மருத்துவ உலகையே அச்சுறுத்தும் ஒரு மோசமான முன்னுதாரணமாக மாறி வருகிறது.

தற்போதைய நிலையில், இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பலை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவச் சங்கங்களும் காவல்துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றன.