தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் பகீர் முறைகேடுகளைத் தோலுரித்துக் காட்டி, இளம் பெண் மருத்துவர் ஒருவர் பணியில் சேர்ந்த முதல் நாளே தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்த அந்த மருத்துவருக்கு, மருத்துவமனையின் உரிமையாளரான ஒரு சீனியர் மகப்பேறு மருத்துவர் (Gynaecologist) கொடுத்த டார்கெட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளையும், அவர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் கட்டாயம் அட்மிட் செய்ய வேண்டும் என்றும், பில்லை எகிற வைப்பதற்காகத் தேவைக்கு அதிகமாக பல நாட்கள் அவர்களை ஐசியூ-வில் (ICU) வைத்திருக்க வேண்டும் என்றும் நிர்வாகம் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
பணத்திற்காக அப்பாவி நோயாளிகளின் உயிரோடும், உணர்வுகளோடும் விளையாடும் இந்த கார்ப்பரேட் பகல் கொள்ளையைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் மருத்துவர், தனது மருத்துவ அறத்தை விட்டுக்கொடுக்க விரும்பாமல் சேர்ந்த முதல் நாளே தனது கைநிறைய சம்பளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு ராஜினாமா செய்துள்ளார்.
“காசுக்காக நோயாளிகளுக்குத் துரோகம் செய்யும் இந்த அயோக்கியத்தனமான சிஸ்டத்தில் என்னால் ஒரு அங்கமாக இருக்க முடியாது; எந்தவொரு சம்பளமும், வேலையும் மக்களின் உயிரை விடப் பெரிதல்ல” என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, ஒட்டுமொத்த தனியார் மருத்துவமனைகளின் முகத்திரையைக் கிழித்துள்ளது!
