டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் முசோரிக்குச் சுற்றுலா வந்த நான்கு பேரில், ஒரு இளம் பெண் நள்ளிரவில் அதிகப்படியான மது போதையில் பொதுமக்களுக்கும் தனது நண்பர்களுக்கும் இடையூறு விளைவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 3:17 மணியளவில், முசோரியின் லைப்ரரி சவுக் பகுதிக்கு அருகே ஒரு இளம் பெண் போதையில் கட்டுக்கடங்காமல் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும், நண்பர்களால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு  தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ‘சீட்டா’ காவற்துறை பிரிவினர், அங்கு இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

அவர்களில் ஒரு பெண் கடுமையான போதையில் தனது நண்பர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தார். நிலைமை மோசமடைவதைத் தடுக்க, நான்கு பேரையும் காவற்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்திலும் அந்தப் பெண் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் தன் நண்பர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, காவற்துறையினரிடம் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டுள்ளார்.

இருப்பினும், நள்ளிரவு நேரம் என்பதையும், சம்பந்தப்பட்டவர் ஒரு பெண் என்பதையும் கருத்தில் கொண்டு காவற்துறையினர் உடனடியாக அவர் மீது எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, அவரது போதை தெளிவடையும் வரை காவல் நிலையத்திலேயே அமர வைத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். போதை தெளிந்த பின், அந்தப் பெண் உட்பட நான்கு சுற்றுலாப் பயணிகளும் தங்களது நடத்தைக்குக் காவற்துறையிடம் மன்னிப்பு கேட்டனர். இச்சம்பவம் குறித்து யாரும் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்காததால், வழக்குப் பதிவு ஏதுமின்றி அவர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.