தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் வழக்கமாக அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இட்லி 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த குறிப்பிட்ட கிளையில் உணவின் விலையை விட கூடுதலாக 10 ரூபாய் கொடுத்தால் மட்டுமே உணவு வழங்கப்படும் என அங்குள்ள ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

“>

மேலும், அங்கு போதிய குடிநீர் வசதி இல்லாததோடு, சாப்பிட்ட தட்டுகளை பயணிகளே கழுவி வைக்க வேண்டும் என்ற அவல நிலையும் நீடிப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், அங்கு சாப்பிட வந்த முதியவர் ஒருவர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு நேர்ந்த அவமரியாதையை வேதனையுடன் விவரிக்கின்றனர்.

இந்நிலையில் பசியோடு வரும் ஏழை எளிய மக்களை அங்குள்ள ஊழியர்கள் மனிதாபிமானமின்றி ஏளனப்படுத்துவதாகவும், உணவின் தரமும் முறையான பராமரிப்பும் கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள முதன்மை அம்மா உணவகம் தடையின்றி செயல்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலைய கிளையில் நடக்கும் இந்த முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.