புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சியா கோயல், போலீஸ் காவலில் இருந்தபோது அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காவலில் இருந்தபோது சியா கோயல் அணிந்திருந்த ஸ்வெட்ஷர்ட் (Sweatshirt) ரூ.30,000 மதிப்புடையது என்றும், கொலை செய்யப்பட்ட கேதன் அகர்வாலிடமிருந்து பெற்ற 1 கோடி ரூபாய் பணத்தை வைத்து அவர் சிறையிலும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பேஷன் செய்வதாகவும் இணையத்தில் பதிவுகள் வைரலாகின.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சில நெட்டிசன்கள், ஆன்லைன் ஷாப்பிங் தளமான ‘அஜியோ’வில் (Ajio) இந்த ஆடை வெறும் 1,600 ரூபாய்க்கு கிடைப்பதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளனர். வெறும் லைக்ஸ் மற்றும் ரீச்சிற்காக வதந்திகளைப் பரப்பி, தேவையற்ற வெறுப்பை உமிழ வேண்டாம் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த கொலை வழக்கின் விசாரணை புனே நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் 18 அன்று புனே அருகே உள்ள லோஹ்காட் கோட்டையிலிருந்து கேதன் அகர்வால் கீழே விழுந்து உயிரிழந்தது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சியா கோயல் மற்றும் அவருடன் இந்த கொலையில் தொடர்புடைய சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரையும் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில், அவர்கள் இருவரும் ரகசிய குறியீடுகள்மற்றும் மறைக்குறியீட்டு முறையில் உரையாடியுள்ளதும், இந்த கொலையைச் செய்வதற்கு முன்பாக அவர்கள் ஒத்திகை பார்த்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
