மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ‘அரனியா வேகா’ கிராமத்தில், பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் அராஜகம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் அரைகுறை ஆடையுடன் தரையில் அமர வைக்கப்பட்டு, அவரது தலைமுடி வெட்டப்பட்டும், கழுத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டும் காட்சியளிக்கிறார்.

கடந்த ஜூன் 30 அன்று அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில், அந்த பெண்ணின் தற்போதைய கணவனின் தந்தை, உறவினர்கள் மற்றும் சில கிராம மக்கள் சேர்ந்து, பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, அவரது ஆடையைக் கிழித்து, முகத்தில் கரியைப் பூசி, காலணி மாலை அணிவித்து கிராம வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து தகவல் அறிந்த போலீஸார், 3 பெண்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இதுவரை 3 சந்தேக நபர்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

 

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 12 முதல் 14 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் திருமணமாகியுள்ளது. பின்னர், அவர் தனது முதல் கணவனை பிரிந்து, 3-4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருடன் வாழத் தொடங்கியுள்ளார். இடையில் அந்த நபர் மீது பெண் கொடுத்த கற்பழிப்பு புகாரின் பேரில் அவர் சிறைக்கும் சென்றுள்ளார்.

சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான அந்த நபருடன், இப்பெண் மீண்டும் இணைந்து வாழத் தொடங்கியுள்ளார். இதனால் கடுமையான ஆத்திரமடைந்த அந்த நபரின் குடும்பத்தினரும், உறவினர்களும், கிராம மக்களும் இணைந்து செவ்வாய்க்கிழமை அன்று இப்பெண்ணைத் தண்டிக்கும் நோக்கில் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.