மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சித் தலைவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான சோதனைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டு வரும் வேளையில், அக்கட்சியின் முக்கியத் தலைவரான பிரம்மானந்த் சக்ரவர்த்தி போலீஸ் கைதுக்கு பயந்து வீட்டுப் புடவை மூட்டைக்குள் ஒளிந்திருந்த விசித்திரமான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அரசியல் புயலையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹவுரா மாவட்டத்தின் உதயநாராயண்பூர் பகுதியில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக டிஎம்சி தலைவர் பிரம்மானந்த் சக்ரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் தனது வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் போலீஸ் படை அவரது வீட்டை அதிரடியாகச் சூழ்ந்த போது, போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் ஒரு அறையில் இருந்த மாபெரும் புடவைக் குவியலுக்குள் புகுந்து தன்னைத்தானே மறைத்துக் கொண்டுள்ளார்.

அந்த அறையில் இருந்த புடவை மூட்டைகள் மீது சந்தேகம் அடைந்த போலீஸார், அங்குத் தீவிரமாகத் தேடிய போது பிரம்மானந்த் சக்ரவர்த்தி அதற்குள் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்துக் கையும் களவுமாக அதிரடியாகக் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தில் தற்பொழுது பாஜக மற்றும் டிஎம்சி தொண்டர்களுக்கு இடையே பல்வேறு நலத்திட்ட ஊழல் புகார்கள் தொடர்பாகக் கடுமையான மோதல்கள் வெடித்துள்ள சூழ்நிலையில், டிஎம்சி தலைவரின் இந்த ‘புடவை லீலை’ வீடியோ இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பகிர்ந்து பாஜகவினர் கடுமையான கேலி கிண்டல்களைக் குவித்து வரும் வேளையில், தங்களது பழிவாங்கும் நோக்கத்துடன்தான் புதிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.