நாடு முழுவதும் 46 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் சஞ்சய் சர்மா, போலீஸ் காவலர் ஒருவரை நடுரோட்டில் வைத்துப் பயங்கரமாகத் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கொளுத்தும் வெயிலில் ரோந்து வாகனத்தில் ஏசி (AC) போட்டிருந்த காவலரைப் பார்த்த அமைச்சர், “உன்னால் ஏசி இல்லாமல் இருக்க முடியாதா? டீசலைச் சேமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார், நீ ஏசி போட்டு ஜாலியாக உட்கார்ந்திருக்கிறாய்” என்று கேமராவிற்கு முன்னால் வறுத்தெடுத்துள்ளார்.

இந்த வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்களின் கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ​இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள், அமைச்சரின் இந்தச் செயலை ‘சுய விளம்பர அரசியல் நாடகம்’ என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “அமைச்சர்கள் மட்டும் பின்னாடி பத்து ஏசி கார்களை அணிவகுப்பாகக் கூட்டிக்கொண்டு சொகுசாகப் போவார்களாம், ஆனால் 46 டிகிரி வெயிலில் உயிரைக் கொடுத்து வேலை செய்யும் காவலர்களுக்கு ஒரு ஏசி கூடக் கிடைக்கக் கூடாதா?” என்று பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அரசியல்வாதிகள் போலீஸ்காரர்களைத் தங்கள் வீட்டு வேலைக்காரர்களாக நடத்துகிறார்கள் என்று ஒரு தரப்பும், போலீசாரை திட்டிவிட்டு அமைச்சர் சொகுசு ஏசி காரில் ஏறிச் சென்ற முரண்பாட்டை சுட்டிக்காட்டி விஐபி (VIP) கலாச்சாரத்திற்கு எதிராக மற்றொரு தரப்பும் தங்களது ஆத்திரத்தை சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.