ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள செக்டார் 16-ல் இயங்கி வரும் பிரபல ‘பிசிக்ஸ் வாலா’ பயிற்சி மையத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டுக்கடங்காத கூட்டமாகத் திரண்டிருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி-ஜேஇஇ மற்றும் நீட்  நுழைவுத்தேர்வு சேர்க்கைக்காக கடந்த மே 17, 2026 அன்று இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு படிக்கும் மாணவர் ஒருவர் அனுப்பிய இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அதில், பயிற்சி மையத்தின் உள்ளே நடப்பதற்குக்கூட இடமில்லாமல் குறுகிய பாதைகளிலும் படிக்கட்டுகளிலும் மக்கள் முட்டிமோதிக் கொண்டு நிற்பது தெளிவாகத் தெரிகிறது.

இதைப் பார்த்த இணையவாசிகள், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தங்களது கடுமையான கவலைகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதிகக் கட்டணம் வசூலிக்கும் இதுபோன்ற பயிற்சி மையங்கள், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் தொடர்ந்து சேர்க்கை நடத்துவதாகவும், இந்த அலட்சியம் ஏதேனும் ஒரு தருணத்தில் கூட்ட நெரிசலில் பெரும் விபத்துக்கு வழிவகுத்துவிடும் என்றும் நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.

“>

 

“இது கல்வி நிறுவனம் போல இல்லை, ஏதோ அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவு போல இருக்கிறது” என்றும், “ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் வரை நிர்வாகம் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்குமா?” என்றும் சமூக ஊடகங்களில் காரசாரமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.