பக்ரீத்பண்டிகையை முன்னிட்டு வங்காளதேசத்தில் விற்பனைக்காக வந்துள்ள இரண்டு மாபெரும் எருமை மாடுகள், உலக அரசியல் தலைவர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் சாயலில் இருப்பதாகக் கூறி, மக்கள் அவற்றை ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர். டாக்கா அருகே உள்ள பண்ணைகளில் வளர்ந்து வரும் இந்த எருமைகளைக் காணவும், அவற்றுடன் செல்ஃபி எடுக்கவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.

அங்குள்ள ஒரு பண்ணையில் உள்ள சுமார் 700 கிலோ எடை கொண்ட ‘அல்பினோ’ (Albino) வகை எருமை மாடு ஒன்றுக்கு அதன் உரிமையாளர் ‘டொனால்ட் டிரம்ப்’ எனப் பெயரிட்டுள்ளார். அந்த எருமையின் வெளிர் நிற தோலும், தலையில் உள்ள வெளிர் நிற முடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகழ்பெற்ற தலைமுடியை நினைவுபடுத்துவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். தோற்றத்தில் டிரம்ப் போல இருந்தாலும், குணத்தில் இந்த எருமை மிகவும் சாதுவானது என அதன் உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா தெரிவித்துள்ளார். இந்த எருமை பண்டிகைக்கு முன்பாகவே நல்ல விலைக்கு விற்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையில் வளர்க்கப்படும் 750 கிலோ எடை கொண்ட எருமைக்கு இஸ்ரேல் பிரதமர் ‘பெஞ்சமின் நெதன்யாகு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. டிரம்ப் எருமையைப் போலல்லாமல், இந்த எருமை பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமாகவும், ஆக்ரோஷமாகவும் காட்சியளிக்கிறது. பராமரிப்பவர்களை முட்ட வருவது, முரட்டுத்தனமாக சத்தமிடுவது என இதன் செயல்பாடுகள் இருப்பதால், இதற்கு ‘வில்லங்கமான புத்தி’ இருப்பதாக பண்ணை மேலாளர் கலகலப்புடன் தெரிவித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், உலகத் தலைவர்களின் பெயர்களைத் தாங்கிய இந்த இரு எருமைகளின் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றன.