2026-ஆம் ஆண்டுக்கான நீட் யுஜி தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் பாஜக மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கடின உழைப்பையும் கனவுகளையும் இந்த ஊழல் நிறைந்த அரசு நசுக்கிவிட்டதாக அவர் சாடினார்.

குறிப்பாக, கடந்த முறை முறைகேடு நடந்தபோது பொறுப்பிலிருந்த அதிகாரிகளுக்கு பாஜக அரசு பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் எதிர்காலத்தைத் திருடுவதில் பிரதமர் மோடியும் பாஜகவும் உடந்தையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

வினாத்தாள் கசிவு மற்றும் அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் மீண்டும் மன அழுத்தம் மற்றும் நிதிச் சுமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். கல்வியை ஒரு சந்தையாக மாற்றி, பணமும் செல்வாக்கும் உள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையை அரசு உருவாக்கிவிட்டதாக அவர் கூறினார்.

“>

 

பிரதமரின் ‘அமிர்த காலம்’ என்பது இளைஞர்களுக்கு ‘விஷ காலமாக’ மாறிவிட்டது என்றும், இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவர்கள் அனுபவிக்கும் இந்தத் துயரத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.