ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகச்சிறப்பாக விளையாடி வரும் வேளையில், அந்த அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ரசிகர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.

ஆர்சிபி அணியின் பிசியோதெரபிஸ்ட் இவான் ஸ்பீச்லி, கடந்த 18 ஆண்டுகளாக அந்த அணியுடன் பயணித்து வந்த நிலையில், தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2008 முதல் அந்த அணியில் இருந்து வரும் இவான் ஸ்பீச்லி, 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும் பிசியோவாக இருந்தவர்.

இவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார விழாவில், நட்சத்திர வீரர் விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டு அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் இவான் ஸ்பீச்லியின் பங்கு மிகப்பெரியது என்று கூறிய விராட் கோலி, “ஆர்சிபி அணியில் நான் அதிக நேரத்தை உங்களுடன்தான் செலவிட்டுள்ளேன்; பல வீரர்களின் கேரியரை உருவாக்கியதில் உங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு” என்று நெகிழ்ச்சியுடன் கூறி அவருக்குக் கட்டிப்பிடித்து விடை கொடுத்தார்.

இதற்கிடையில், ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து திரும்பியுள்ளார். அவருக்குப் பதிலாக ஜேக்கப் பெத்தேல் கடந்த சில போட்டிகளில் விளையாடி வருகிறார்.

“>

 

அடுத்ததாக மே 7-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதவுள்ள நிலையில், அணியின் இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.