உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த அபிஷேக் சிங் என்ற இளைஞர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மிகப்பெரிய சைபர் மோசடியில் சிக்கி சுமார் ₹85,57,000 பணத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக 2025-ம் ஆண்டிலேயே வழக்கு (Crime No: 02/2025) பதிவு செய்யப்பட்டும், இதுவரை உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“கடந்த ஓராண்டாக நான் தட்டாத கதவுகளே இல்லை. ‘நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்ற ஒற்றைப் பதிலைக் கேட்டு என் காதுகளே மரத்துப்போய்விட்டன. என் உழைப்பின் ஒவ்வொரு ரூபாயும் பறிபோன நிலையில், என் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கிறது” என்று அவர் தனது கடிதத்தில் குமுறியுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளும் ஜாமீனில் வெளியே வரப்போகும் சூழலில், எஞ்சிய குற்றவாளிகளைப் பிடித்துத் தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அவர் அதிகாரிகளுக்குக் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளார். “இதை ஒரு கோப்பாகப் பார்க்காமல், உடைந்து போயிருக்கும் ஒரு மனிதனின் கடைசிப் போராட்டமாகப் பாருங்கள்” என்ற அவரது வரிகள் காண்போரின் நெஞ்சைக் கசக்கி வருகின்றன.

சைபர் குற்றங்களில் சிக்கும் நடுத்தர வர்க்க மக்களின் நிலையும், அவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள காலதாமதமும் இந்தச் சம்பவம் மூலம் மீண்டும் ஒருமுறை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.