பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள கிருபாநிதி கல்லூரியில் சிஇடி நுழைவுத்தேர்வு நடைபெற்றபோது, அங்கு வந்த சுமார் 5 முதல் 7 பிராமண மாணவர்கள் தங்களின் புனித நூலான ‘பூணூலை’ அகற்றினால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவீர்கள் என்று கல்லூரி ஊழியர்களால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

“காதணிகளைக் கழட்டச் சொன்னது உலோக விதிமுறை என்பதால் புரிந்துகொண்டோம், ஆனால் பூணூலையும் கழட்டச் சொன்னது மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதனால் தேர்வையும் சரியாக எழுத முடியவில்லை” எனப் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் கைகளில் கட்டப்பட்டிருந்த காப்பு கயிறுகளும் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

இந்த விவகாரம் காட்டுத் தீயாகப் பரவிய நிலையில், கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் இது மிகுந்த துரதிர்ஷ்டவசமானது என்றும், இதற்குத் தொடர்புடைய 3 ஊழியர்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தச் சம்பவத்தை முன்வைத்து பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, “காங்கிரஸ் அரசு இந்து விரோத போக்கைக் கடைபிடிக்கிறது; ஏற்கனவே மங்களசூத்திரத்தை அகற்றச் சொன்னவர்கள் இப்போது பூணூலை அறுக்கிறார்கள்” எனச் சாடியுள்ளார். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.