சர்வதேச அரசியலில் தனிப்பட்ட நட்பை விட நாட்டின் நலன்களே முக்கியம் என்பதை டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய பதிவு நிரூபித்துள்ளது. பிரதமர் மோடியுடன் ‘ஹவுடி மோடி’ மற்றும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சிகளில் நெருக்கம் காட்டிய ட்ரம்ப், தற்போது இந்தியாவை ‘நரகம்’ என்று விமர்சித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்திய வம்சாவளியினரை இழிவுபடுத்தும் வகையில் ட்ரம்ப் பேசியிருப்பது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள இந்திய வம்சாவளி எம்.பி. அமி பேரா, “அமெரிக்காவை முன்னேற்றிய குடியேறிகளின் உழைப்பு தெரியாத ஒரு அறிவற்ற தலைவர் ட்ரம்ப்” என விளாசியுள்ளார்.

இந்திய வெளியுறவுத் அமைச்சகமும் ட்ரம்பின் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். அதைப் போய் நரகம் என்று சொல்வது ட்ரம்பின் அறியாமையையே காட்டுகிறது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் ஈரானும் குதித்துள்ளது.

மும்பையில் உள்ள ஈரான் தூதரகம், “ட்ரம்ப் ஒருமுறை இந்தியாவிற்கு வந்து அதன் கலாச்சார வளத்தைப் பார்க்க வேண்டும்” என ட்வீட் செய்துள்ளதுடன், மகாராஷ்டிராவின் கலாச்சாரப் பெருமைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. ட்ரம்பின் இந்தச் சர்ச்சை பேச்சு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.