மகாராஷ்டிர மாநிலம் புனே மாநகராட்சியில், ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் பெண் கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, நடுரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாணேர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிப் பணிக்காக ஒதுக்கப்பட்ட 3 கோடி ரூபாய் டெண்டரில், “கமிஷன்” கைமாறுவதில் ஏற்பட்ட மோதலே இந்த அசிங்கமான சண்டைக்குக் காரணம் எனப் புகார் எழுந்துள்ளது.
View this post on Instagram
முன்னாள் கவுன்சிலர் ராஜஸ்ரீ காலே மற்றும் தற்போதைய கவுன்சிலர் ரோகிணி சிம்டே ஆகிய இருவருக்கும் இடையே மாநகராட்சி அலுவலகத்தின் கட்டுமானப் பிரிவு அருகிலேயே இந்த மோதல் வெடித்தது. “கமிஷன் கிடைக்கும் வரை வேலையைத் தொடங்காதே” எனத் தற்போதைய கவுன்சிலர் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாக ராஜஸ்ரீ பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மற்றவர்கள் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. பாஜக நிர்வாகிகள் இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்றபோதிலும், வீடியோ வெளியானதால் கட்சித் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
