மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், சுமார் 180 சிறுமிகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டி, 350-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களைப் படமெடுத்த முகமது அயாஸ் (என்கிற தன்வீர்) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பராத்வாடா பகுதியைச் சேர்ந்த இவர், சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் மூலம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் நட்பாகப் பழகி, ‘லவ் ட்ராப்’ முறையில் அவர்களை வலையில் வீழ்த்தியுள்ளார்.

பின்னர் அந்தச் சிறுமிகளை மும்பை, புனே போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்களை வைத்துச் சிறுமிகளை பிளாக்மெயில் செய்து, அவர்களைக் கட்டாயப்படுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இது குறித்து பாஜாக மூத்த தலைவர் கிரித் சோமையா கூறுகையில், இது ஒரு திட்டமிட்ட ‘செக்ஸ் ஸ்கேம்’ என்றும், கோச்சிங் கிளாஸ் செல்லும் மாணவிகளையே இவர் குறிவைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அயாஸைக் கைது செய்துள்ள போலீஸார், அவரது செல்போனை பறிமுதல் செய்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.