தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற இந்திய நபர் ஒருவர், அங்குள்ள ஹோட்டல் பெண் ஊழியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. இந்தச் சம்பவம் வெளிநாடுகளில் இந்தியப் பயணிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகப் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் தன்னை ‘மோனு ஆஸ்மி’ என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொள்வதும், அவரது அனுமதியின்றி தவறான முறையில் தொடுவதும் பதிவாகியுள்ளது. இந்த முழுச் சம்பவத்தையும் அந்த நபரே வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய மற்றும் சர்வதேச நெட்டிசன்கள் அந்த நபருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “சுற்றுலா செல்லும் இடங்களில் அந்த நாட்டு கலாசாரத்தையும், உழைக்கும் பெண்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தனிநபரின் இத்தகைய கீழ்த்தரமான செயல், ஒட்டுமொத்த இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் மீதான பார்வையைச் சர்வதேச அளவில் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கியுள்ளார். இருப்பினும், அந்த வீடியோவின் நகல்கள் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து தாய்லாந்து அரசு அதிகாரிகளோ அல்லது சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரையும் அளிக்கவில்லை.

 

மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களையும், பெண்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டியது அவசியம் என்றும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..