​தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் புதன்கிழமை இரவு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் சிலர், கட்டுப்பாட்டை மீறி வானரங்களைப் போல் பிரச்சார வாகனத்தின் மீது தாவி ஏறியும், செல்பி எடுக்க முயற்சித்தும் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

​ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த திருமாவளவன், தான் தடுத்தும் மீறி வாகனத்தில் ஏறிய இளைஞரை கன்னத்தில் ‘பளார்’ என அறைந்து விரட்டினார். இருப்பினும், அந்த இளைஞர் எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இன்றி அங்கேயே மந்தமாக அமர்ந்திருந்தார். மேலும், சிலர் உற்சாக பானம் அருந்திய போதையில் வாகனத்திலேயே ஆட்டம் போட்டதால், கடும் அதிருப்தி அடைந்த திருமாவளவன் தனது உரையை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

​இதற்கிடையே, அடி வாங்கிய அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில், “அவர் என் தலைவர், அவர் என்னை அடித்ததை ஆசிர்வாதமாகவே கருதுகிறேன்” என ‘அந்தர் பல்டி’ அடித்துத் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.