ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில், சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில் பெட்ரோல் பங்க் ஒன்றில் அபாயகரமான செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் தங்களுடைய ஸ்கார்பியோ எஸ்யூவி காரை டீசல் ஊற்றி கழுவுவது போன்ற காட்சியை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக படம்பிடித்துள்ளனர்.

மேலும் பெட்ரோல் பங்க் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பகுதியில், டீசலை இதுபோன்று அலட்சியமாகப் பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“>

இதனால் சிரோஹி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புஷ்பேந்திர சிங் உத்தரவின் பேரில், பாலி எம் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி மகிபால் சிங் மற்றும் அவரது நண்பரை அடையாளம் கண்டு கைது செய்தனர். மேலும், இந்த ஸ்டண்ட் செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் வெறுமனே சில ‘லைக்ஸ்’ மற்றும் ‘ஃபாலோயர்களுக்காக’ தங்களின் உயிரையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் பணயம் வைத்து இத்தகைய முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என போலீசார் எச்சரித்துள்ளனர். பொது இடங்களில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.