ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்குக் காலி எண்ணெய் டேங்கர் கப்பல்களை அனுப்பி, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை நிரப்பி வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம், இந்தியக் கடற்படை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையின் மூலம், நாட்டின் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஓமான் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியப் போர்க்கப்பல்கள், கச்சா எண்ணெய் சுமந்து வரும் இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன.
மறுபுறம், போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் 20 இந்தியக் கப்பல்களும், 600-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகளும் சிக்கியுள்ளனர். இவர்களைப் பாதுகாப்பாக மீட்க ஈரான் மற்றும் பிற நாடுகளுடன் இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஈரான் தனது கடற்கரையோரம் கப்பல்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தியிருப்பது கூடுதல் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியக் கடற்படை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
போர்ச் சூழலில் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போதைய முக்கிய சவாலாக உள்ளது.
