அணுசக்தி விவகாரம் தொடர்பாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த சில தினங்களாகத் தீவிர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவரான அயத்துல்லா காமேனி உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் தலைவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, வளைகுடா பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் அந்த நாடுகளின் முக்கிய கேந்திர மையங்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. ஈரானின் இந்தத் திடீர் ஆக்ரோஷமான தாக்குதலால் வளைகுடா நாடுகள் நிலைகுலைந்துள்ளன.

ஈரானின் இந்த அதிரடி பதில் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆச்சரியம் தெரிவித்தார். அவர் கூறியதாவது “ஈரான் வளைகுடா நாடுகள் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சரணடைவார்கள் என்று பலரும் கருதினர். ஆனால், தங்களின் மிகப்பெரிய வலிமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் அவர்கள் திருப்பித் தாக்கியுள்ளனர். ஈரான் ஒரு மிகப்பெரிய வல்லரசு என்பதை நிரூபித்துள்ளனர் என்றார்.

மேலும் நேற்று வரை ஈரானுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த அதிபர் டிரம்ப், திடீரென ஈரானின் ராணுவ வலிமையைப் புகழ்ந்து பேசியிருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.