ஸ்மார்ட்போன் இன்று அனைவரின் கைகளிலும் ஒரு அத்தியாவசிய கருவியாக மாறிவிட்டது, ஆனால் அதன் பேட்டரியைக் கையாள்வதில் நாம் காட்டும் சிறிய கவனக்குறைவும் பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூடும்.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், பழைய மொபைல் பேட்டரியுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் கையில் அது திடீரென வெடித்தது.

இந்த விபத்தில் ஒரு சிறுவனின் கட்டைவிரல் துண்டானதுடன், மற்ற விரல்களும் பலத்த காயமடைந்தன பழைய போன்களின் பேட்டரிகள் காலப்போக்கில் வீங்கிப் போயிருக்கலாம் அல்லது அதிலுள்ள ரசாயனங்கள் கசியக்கூடும் என்பதால், அவற்றை வீட்டிற்குள் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருப்பது ஆபத்தானது.

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்தவை. பேட்டரியை பற்களால் கடிப்பது, ஊசி போன்ற கூர்மையான பொருட்களால் குத்துவது அல்லது அதிக அழுத்தம் கொடுப்பது போன்றவை பேட்டரிக்குள் இருக்கும் பாதுகாப்பு படலத்தை சேதப்படுத்தி, மிகப்பெரிய வெடிப்பை உண்டாக்கும்.

எனவே, பழைய போன் அல்லது பேட்டரிகளை குழந்தைகள் கையில் கொடுக்காமலும், வெயிலில் வைக்காமலும் இருப்பது அவசியம். பயன்படுத்த முடியாத பழைய பேட்டரிகளை வீட்டிலேயே வைத்திருக்காமல், உரிய முறையில் அப்புறப்படுத்துவதே பாதுகாப்பானது.