உத்தரப் பிரதேச மாநிலம் ஏடா (Etah) மாவட்டத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி, சோதனையின் போதே உடைந்து தண்ணீர் வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுனாரி நகர் பூங்காவில் உள்ள இந்த அரசுப் பணித் தொட்டியின் குழாய் திடீரென உடைந்ததால், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் ஊற்று போல பீய்ச்சியடித்தது. இதனால் அங்கிருந்த அரசு அலுவலக அறைகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு, மோட்டாரை அணைக்கும் வரை தண்ணீரைத் தடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர்.

​இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது ‘ஜல் ஜீவன் மிஷன்’ (குடிநீர் வாழ்வுத் திட்டம்) அல்ல, இது ‘ஜல் கமிஷன் மிஷன்’ எனச் சாடியுள்ள அவர், பாஜகவின் ஊழலைத் தாங்க முடியாமல் தண்ணீர் தொட்டிகள் ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறுவதாகக் கிண்டல் செய்துள்ளார். ஏற்கனவே மஹோபா மாவட்டத்திலும் இதுபோல ஒரு தொட்டி உடைந்த நிலையில், அடுத்தடுத்து நடக்கும் இந்தச் சம்பவங்கள் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்துப் பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளன.