உத்தரப் பிரதேச மாநில இடைநிலைத் தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர் ஒருவர் திருத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூகவியல் (Sociology) தேர்விற்கான அந்த விடைத்தாளில், ராகவ் என்ற மாணவர் “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான்” என்று எழுதியதோடு, “தவறுதலாக விடுபட்டுவிட்டது, என்னை மன்னித்து தேர்ச்சி பெறச் செய்யுங்கள்” என உருக்கமாக வேண்டியுள்ளார். அதோடு நில்லாமல், விடைத்தாளின் முன்னும் பின்னும் இரண்டு 100 ரூபாய் நோட்டுகளை ஒட்டி லஞ்சம் கொடுக்கவும் முயன்றுள்ளார்.

​இந்த விடைத்தாளில் உள்ள பதில்கள் அனைவரையும் அதிரவைத்துள்ளன. குறிப்பாக, “பாபரின் தந்தை பெயர் என்ன?” என்ற கேள்விக்கு “சத்ரபதி சிவாஜி மகாராஜ்” எனப் பதிலளித்து, அந்தப் பதிலுக்கு அவரே 100-க்கு 100 மதிப்பெண்களும் போட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், சமூகவியல் தேர்வில் வரலாற்றுப் பாடம் சம்பந்தப்பட்ட கேள்வி கேட்கப்பட்டிருப்பதாலும், தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பே இந்த வீடியோ வெளியானதாலும், இது ஒரு போலியான (Fake) வீடியோ எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.