இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் இனி ரொக்கப் பணம் அல்லது சர்வதேச கிரெடிட் கார்டுகளைச் சார்ந்திருக்காமல், இந்தியாவின் ‘யுபிஐ ஒன் வேர்ல்ட்’ வசதி மூலம் எளிதாகப் பணம் செலுத்தலாம்.
இதற்காக அவர்கள் இந்திய வங்கிக் கணக்கோ அல்லது இந்திய சிம் கார்டோ வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை; Transcorp நிறுவனத்தின் CheqUPI செயலியைப் பதிவிறக்கம் செய்து, பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களைப் பதிவேற்றி ஒரு டிஜிட்டல் வாலட்டை உருவாக்கிக் கொண்டால் போதுமானது.
இந்த வாலட்டில் சர்வதேச கார்டுகள் மூலம் ஒருமுறைக்கு ₹25,000 வரையிலும், மாதம் ₹50,000 வரையிலும் பணம் ஏற்றி, டீக்கடை முதல் பெரிய கடைகள் வரைஅனைத்து இடங்களிலும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாகப் பணம் செலுத்த முடியும்.
தற்போது புது தில்லியில் நடைபெறும் ‘இந்தியா ஏ.ஐ. இம்பாக்ட் சமிட் 2026’ மாநாட்டிற்கு வந்துள்ள 40-க்கும் மேற்பட்ட நாட்டுப் பிரதிநிதிகளுக்காக இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2026-ல் மட்டும் 2,170 கோடி பரிவர்த்தனைகளைக் கையாண்டு உலகின் மிகப்பெரிய நிகழ்நேரப் பணப் பரிவர்த்தனை அமைப்பாக யுபிஐ உருவெடுத்துள்ளது.
பயணிகள் தங்கள் இந்தியப் பயணத்தை முடித்துத் திரும்பும்போது, வாலட்டில் மீதமுள்ள தொகையை மீண்டும் தங்களின் சொந்த வங்கிக் கணக்கிற்கேமாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது, இது வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் நவீன அனுபவத்தை வழங்குகிறது.
