பீகாரில் இன்று தொடங்கியுள்ள மேட்ரிக் பொதுத்தேர்வில், சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு மாணவர்கள் சாகசம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கே கதவுகள் பூட்டப்படும் என்று அரசு கறாராக அறிவித்திருந்த நிலையில், சில நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மற்றும் பதற்றமடைந்த மாணவர்கள், பாட்னா உள்ளிட்ட பல இடங்களில் 10 அடி உயர மதில் சுவர்களை ஏறிக்குதித்து தேர்வு மையத்திற்குள் புகுந்தனர். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது அந்த ‘ஸ்பைடர்மேன்’ சாகசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

​கோபால்கஞ்ச் மற்றும் பெட்டியா போன்ற இடங்களிலும் இதே போன்ற கூத்துகள் அரங்கேறின. கேட் மூடப்பட்டதால் மாணவிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுததோடு, வேறு வழியின்றி மற்றவர்களின் உதவியுடன் கேட்டின் மீது ஏறிக்குதித்து உள்ளே சென்றனர். இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், காலணி, பெல்ட், கடிகாரம் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு கடும் சோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். “படிப்பு முக்கியம் பாஸ்” என மாணவர்கள் காட்டிய இந்த அதிரடி வேகம், பீகார் கல்வித்துறையின் கெடுபிடிகளையும் தாண்டி இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.