கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆட்டத்தில் மட்டுமல்லாமல் களத்தின் பண்பாட்டிலும் தனது அதிரடியைக் காட்டியுள்ளது. 2025 ஆசியக் கோப்பை முதல் இந்திய அணி பின்பற்றி வரும் “கை குலுக்காத” கொள்கையை, இந்தப் போட்டியிலும் இந்திய வீரர்கள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்தனர்.

​ஆட்டம் முடிந்ததும் ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் கைகொடுக்கக் காத்திருந்த போதும், இந்திய வீரர்கள் அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் நேராக வெளியேறினர். இது மைதானத்தில் இருந்தவர்களையும், சமூக வலைதளங்களில் இதைப் பார்த்த ரசிகர்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் இந்த ‘நோ ஹேண்ட்ஷேக்’ பாலிசி, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றத்தின் நேரடி வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.