கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கையில் ஏந்தியபடி நின்றிருந்த சிறுவன் ஒருவன் பிரதமரின் கவனத்தை ஈர்த்தார். நீண்ட நேரமாக அந்தப் படத்தைத் தூக்கியபடி நின்றிருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து, “நீண்ட நேரம் கைகளை உயர்த்திப் பிடித்திருப்பதால் உனக்குக் கை வலிக்கும், அந்தப் படத்தைக் கீழே இறக்கு” என்று கனிவுடன் கூறினார்.

 

மேலும், அந்த ஓவியத்தின் பின்னால் சிறுவனின் வீட்டு முகவரியை எழுதித் தருமாறும், தனக்கு அந்த ஓவியத்தை அனுப்பி வைத்தால் நிச்சயமாக பதில் கடிதம் எழுதுவதாகவும் பிரதமர் உறுதியளித்தார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், பல்வேறு புதிய ரயில் சேவைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

திருவனந்தபுரத்தை நாட்டின் முக்கிய மையமாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த 11 ஆண்டுகளில் நகர்ப்புற உள்கட்டமைப்பில் மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.