கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியில், பிஸ்கட் சாப்பிட்ட ஒரு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிராம்குளம் பகுதியைச் சேர்ந்த ஷிஜில் – கிருஷ்ணபிரியா தம்பதியரின் ஒரே மகனான இஹான் (அப்பு), கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது தந்தை வாங்கி வந்த பிஸ்கட் மற்றும் முന്തിிரிப் பழங்களைச் சாப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உணவு உட்கொண்ட அரை மணி நேரத்திலேயே குழந்தையின் வாயிலிருந்து நுரை தள்ளியதுடன், உடல் நீல நிறமாக மாறி குழந்தை மயங்கி விழுந்துள்ளது. உடனடியாக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக குழந்தையின் தாய் வீட்டார் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது, இது குறித்து பெற்றோரிடம் 18 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் பிஸ்கட்டில் விஷம் ஏதும் கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தையின் மரணத்திற்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, இது தற்செயலான விபத்தா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்த உண்மைத் தகவல்கள் வெளிவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.