இத்தாலியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்த ஜோதி என்ற இந்தியப் பெண், அங்குள்ள அலுவலக கலாசாரம் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தனது முதல் நாள் அனுபவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேலதிகாரிகளை ஐயா என்று அழைக்காமல் அவர்களது செல்லப் பெயரால் அழைக்கும் சமத்துவ முறை நிலவுவதாகவும், காபி இடைவேளைகளின் போது அலுவலக வேலைகள் குறித்துப் பேசத் தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக மாலை ஆறு மணிக்கு மேல் அலுவலகப் பணிகள் எதுவும் இருப்பதில்லை என்றும், அதன் பிறகு ஊழியர்களைத் தொடர்பு கொள்வது அங்கு மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுவதாகவும் அவர் வியப்புடன் தெரிவித்துள்ளார். வேலை நேரத்தில் ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேற்றம் குறித்து எவ்விதக் கெடுபிடிகளும் இல்லை என்றும், தவறு செய்யும் போது சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், இந்திய அலுவலகங்களிலும் இத்தகைய ஆரோக்கியமான சூழல் உருவாக வேண்டும் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.