திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பை நயினார் நாகேந்திரன் மனதார வரவேற்றுள்ளார். தமிழ்ப் பண்பாட்டை ஒடுக்க நினைப்பவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டத்திற்குப் கிடைத்த வெற்றியாக இதைக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் அரசு பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்ட போதிலும், மனம் தளராமல் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த முருக பக்தர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தீபமேற்றும் உரிமையை மீட்டெடுத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாக, இன்று மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய ஆன்மீக நிகழ்வை முன்னெடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, “வெற்றிவேல்! வீரவேல்!” என முழக்கமிட்டு மாக்கோலமிட வேண்டும் என அவர் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார். இது வெறும் தீபம் மட்டுமல்ல, தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மீட்டெடுத்த வெற்றிக் கொண்டாட்டம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.