நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்ற பகுதிகளில் சுமார் 1000 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர் துணிச்சலாக இறங்கும் திகிலூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் நீர்மட்டம் மிகக் கீழே சென்றுவிட்டதால், அங்குப் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார்கள் மணலில் சிக்கிக்கொண்டாலோ அல்லது பழுதடைந்தாலோ அவற்றைப் பழுது நீக்குவதற்காகப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து இத்தகைய குறுகிய மற்றும் இருண்ட குழாய்களுக்குள் இறங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலியில், அந்தப் பணியாளர் கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் மெல்ல மெல்லப் பாதாள லோகத்திற்குச் செல்வது போல ஆயிரம் அடி ஆழத்திற்குச் செல்வதும், இறுதியில் அங்கு நீர் ஓட்டத்திற்கு இடையே மின்மோட்டார் இருப்பதும் பதிவாகியுள்ளது.
சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் இவ்வளவு ஆழமான பகுதியில் பணிபுரியும் அந்த நபரின் தைரியத்தைப் பாராட்டியும், இக்கட்டான சூழலில் வேலை செய்யும் இவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
