நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவைக்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர் சிகரெட் புகைத்ததாக பா.ஜ.க. தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் சிகரெட் பிடித்ததாக பா.ஜ.க. எம்.பி அனுராக் சிங் தாக்கூர் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, அந்த எம்.பி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கீர்த்தி ஆசாத் என பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைக்குள் அமர்ந்திருந்தபோது, கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த சிகரெட் மூலம் புகை பிடித்ததாக கூறி, அதுதொடர்பானதாக கூறப்படும் வீடியோ பதிவையும் அமித் மால்வியா தனது எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த பதிவில், பொதுவாக புகை பிடிப்பது சட்டவிரோதமானதாக இல்லாவிட்டாலும், நாடாளுமன்ற அவைக்குள் சிகரெட் பிடிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் இந்த முறைகேடான நடத்தை குறித்து அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.