மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்டத்தில் உள்ள இரயில்வே ஊழியர்கள் குடியிருப்பின் கழிவறைக்கு வெளியே, பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ரத்தம் காயாத நிலையில், போர்வையின்றித் தரையில் கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் கடும் குளிரில் கைவிடப்பட்ட அந்தக் குழந்தையைக் கண்ட தெரு நாய்கள், அதிசயமாகக் கூட்டமாகச் சுற்றிக் கூடி அந்தக் குழந்தைக்குப் பாதுகாப்பளித்து ஒரு நெகிழ்ச்சியான அற்புதத்தை நிகழ்த்தியுள்ளன. நாய்கள் குரைக்கவோ அல்லது நகரவோ இல்லை; மாறாக, அவை ஒரு சரியான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, அதிகாலை வெளிச்சம் வரும் வரை வேறு எந்த உயிரினத்தையும் குழந்தைக்கு அருகில் வர அனுமதிக்கவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்த குடியிருப்புவாசிகள் வியப்புடன் தெரிவித்தனர். நாய்கள் அந்தக் குழந்தையின் உயிரைப் பாதுகாக்கப் போராடுவதுபோல விழிப்புடன் இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மறுநாள் காலையில் சு்க்லா மோண்டல் என்ற குடியிருப்புவாசி குழந்தையைக் கண்டபோது, மெதுவாகப் பேசி அணுகிய பின்னரே நாய்கள் அந்த வளையத்தை விட்டு விலகியிருக்கின்றன. உடனடியாக அவர் துப்பட்டாவால் குழந்தையைச் சுற்றிக் கொண்டு அண்டை வீட்டாருக்குத் தகவல் கொடுத்து உதவியை நாடினார்.

உடனடியாக மகேஷ் கஞ்ச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை, பின்னர் கிருஷ்ணாநகர் சதார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கே குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு எந்தக் காயங்களும் இல்லை என்றும், பிரசவம் முடிந்த சில நிமிடங்களிலேயே குழந்தை கைவிடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். அதிகாலை வேளையில் கேட்ட குழந்தையின் அழுகுரலை, ஏதோ ஒரு குடும்பத்தின் நோயாளி குழந்தையின் சத்தம் என்று நினைத்ததாகப் பகுதிவாசிகள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நவதீப் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவின் மறைவில் அந்தக் குடியிருப்பில் வசிக்கும் யாரோ ஒருவர் குழந்தையை விட்டுச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், குழந்தைக்கு நீண்ட காலப் பராமரிப்பு அளிப்பதற்கான நடைமுறைகளையும் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

நவதீப் நகரம் கருணை மற்றும் இரக்கத்தின் மையமாக எப்போதும் இருந்து வருவதாகவும், 15 ஆம் நூற்றாண்டு துறவி ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் போதனைகள் நிறைந்த இந்த இடத்தில், அந்த இரக்க உணர்வே நாய்கள் மூலம் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் பகுதி பெரியவர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்தனர்.